டாஸ்மாக் பணியாளர்கள் சென்னையில் மறியல் போராட்டம் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது நடத்த முடிவு

சட்டமன்ற கூட்டத்தொடரின்போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவது என டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2019-03-07 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஏ.இ.பாலுசாமி தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க முன்னாள் பொது செயலாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் துறை வாரியான மானிய சட்டமன்ற கூட்டத்தொடரின்போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவது. டாஸ்மாக்கில் உள்ள இதர சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளையும் சந்தித்து பேசி இணைந்து போராட்டம் நடத்த அறைகூவல் விடுப்பது. அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்திட கேட்டுக்கொள்வது.

விற்பனை கூடங்களின் வேலை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையாக குறைத்திட அரசை கேட்டுக்கொள்வது. விற்பனை தொகையை சென்னையில் உள்ள நடைமுறையை போல் பிற மாவட்டங்களிலும் அரசு வங்கிகள் மூலம் நேரடியாக வசூலித்திட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில பொதுச்செயலாளர் ஜி.வி.ராஜா, பொருளாளர் அருள் மணி, துணை பொதுச் செயலாளர் புருஷோத்தமன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்