குரங்கணி மலைப்பாதையில் விபத்து, படுகாயம் அடைந்த பெண் உள்பட 2 பேர் சாவு

போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பாதையில் ஜீப் மரத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-03-08 23:00 GMT
போடி,

போடியை அடுத்த ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52). இவரது மனைவி முருகேஸ்வரி(47). இவர்கள் தங்கள் வீட்டு விசேஷத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க கடந்த 6-ந்தேதி போடிமெட்டு பகுதிக்கு ஜீப்பில் சென்றனர். மணிகண்டன் ஜீப்பை ஓட்டினார். அங்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு பின்னர் அவர்கள் ராசிங்காபுரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் போடிமெட்டு மற்றும் மணப்பட்டி பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தவர்களை ஜீப்பில் ஏற்றினர்.

அந்த ஜீப் குரங்கணி மலைப்பாதையில் ஆண்டிஓடை அருகே வந்த போது திடீரென மணிகண்டனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஜீப்பை ஓட்டி வந்த மணிகண்டன், அவரது மனைவி முருகேஸ்வரி மற்றும் அதில் பயணம் செய்த ராஜா (45), ராஜகோபால், பவுன், சேகர், தொந்தி ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்த ராஜா, மணிகண்டனின் மனைவி முருகேஸ்வரி ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்