மயக்க பிஸ்கெட் கொடுத்து ரெயில் பயணிகளிடம் திருடிய 2 பேர் கைது

மயக்க பிஸ்கெட் கொடுத்து ரெயில் பயணிகளிடம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-03-11 22:31 GMT
மும்பை,

மும்பை லோக்மான்யா திலக் டெர்மினசில் சம்பவத்தன்று 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக்கொண்டு இருந்தனர். ரெயில்வே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சோதனை நடத்தினர்.

இதில், அவர்களிடம் இருந்து மயக்க மருந்து கலந்த 3 கிரீம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், அவர்கள் பீகாரை சேர்ந்த சஞ்சய் பாட்டீல்(வயது38), அரவிந்த் பிரசாந்த்(39) ஆகியோர் என்பது தெரியவந்தது. 2 பேரும் லோக்மான்ய திலக் டெர்மினசில் இருந்து வடமாநிலம் செல்லும் தொழிலாளர்களிடம் நைசாக பேசுவார்கள். பின்னர் அவர்களிடம் நட்பாக பழகி மயக்க மருந்து கலந்த பிஸ்கெட்டை சாப்பிட கொடுப்பார்கள். இதில், பயணி மயங்கிய உடன் அவர்களின் பணம், உடைமைகளை திருடிவிட்டு தப்பி செல்வார்கள்.

இதுவரை அவர்கள் சுமார் 12 பயணிகளிடம் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. ரெயில்வே போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்