பவானி ஆற்றங்கரையில் கடத்த முயன்ற 100 மணல் மூட்டைகள் பறிமுதல்

பவானி ஆற்றங்கரையில் கடத்த முயன்ற 100 மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.

Update: 2019-03-12 22:45 GMT
கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூர் பகுதியில், பவானி ஆற்றில் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தப்படுவதாக கோபி தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து விஜயகுமார் வருவாய்த்துறை அதிகாரிகள் 3 பேருடன் நேற்று முன்தினம் இரவு கூகலூர் அருகே உள்ள ரோஜாபூந்தோட்டம் என்ற இடத்தில் பவானி ஆற்றங்கரையில் திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது ஆற்றங்கரையில் 100 மணல் மூட்டைகள் இருந்தது. யாரோ மர்ம நபர்கள் ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளியுள்ளார்கள். பின்னர் அதை கடத்தி செல்வதற்காக சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 100 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை மீண்டும் ஆற்றில் கொட்டினார்கள்.

பவானி ஆற்றில் தொடர்ந்து மணல் கடத்தல் நடப்பதால், அதிகாரிகள் தினமும் ரோந்து சென்று அதை தடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

மேலும் செய்திகள்