பொள்ளாச்சி பாலியல் கொடுமையை கண்டித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள், அ.ம.மு.க.வினர் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் கொடுமையை கண்டித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள், அ.ம.மு.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

Update: 2019-03-14 21:45 GMT
தூத்துக்குடி, 

பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு கல்லூரி கிளை செயலாளர் சுலைராஜ் தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றிதாமஸ் தலைமை தாங்கினார். மாணவர் அணி மாவட்ட செயலாளர் நம்பிராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டு உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பாலன், மீனவர் அணி இணை செயலாளர் சுகந்திகோமஸ், மருத்துவர் அணி இணை செயலாளர் கோசல்ராம், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் பெரியசாமி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சிவ.துரையரசன், துணைத்தலைவர் சண்முககுமாரி, பகுதி செயலாளர்கள் எட்வின்பாண்டியன், கோட்டாளமுத்து, ஆறுமுகம், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்