என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் - சாமிநாதன் எம்.எல்.ஏ. பேச்சு

புதுவை நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-14 23:04 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி மாநில பாரதீய ஜனதா கட்சியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் செல்வகணபதி, சங்கர், பொதுச்செயலாளர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு இணை பொதுச்செயலாளர் சந்தோஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்வது தொடர்பாக பல்வேறு அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும். நரேந்திர மோடி பிரதமாக வேண்டுமென அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள். புதுவையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றார்.

இந்த முறையும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார். இப்போது அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், பாரதீய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்