எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

காரைக்காலிலிருந்து தமிழகப் பகுதிக்கு எரிசாராயம் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர். தப்பிய மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-03-15 23:13 GMT
காரைக்கால்,

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் போலீசாரும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்று முன்தினம் திருமலைராயன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், காரைக்கால்-திட்டச்சேரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயன்றபோது கார் நிற்காமல் வேகமாக சென்றது. அதைத் தொடர்ந்து போலீசார் அந்த காரை விரட்டிச் சென்றனர். மேலையூர் சாராயக்கடை அருகே சென்றபோது காரை நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடினார்கள்.

உடனே போலீசார் அவர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தமிழக பகுதியான நாகப்பட்டினம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த தங்கபாண்டி (வயது 31), செல்லூரை சேர்ந்த சுபாஷ் (28) ஆகியோர் என்பதும் தெரிய வந்தது.

மேலும் காரில் அவர்களுடன் வந்து தப்பி ஓடியவர் கார் டிரைவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவபாண்டி என்பதும், அவர்கள் காரைக்காலிலிருந்து தமிழகப் பகுதிக்கு எரிசாராயத்தை கடத்தியதையும் விசாரணையில் ஒப்புகொண்டனர். அதைத் தொடர்ந்து தங்கபாண்டி மற்றும் சுபாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும காரில் இருந்த எரிசாராய பாக்கெட் மூட்டைகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கார், எரிசாராயம் மற்றும் பிடிபட்ட இருவரையும் மாவட்ட கலால்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்