பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2019-03-16 22:45 GMT
தஞ்சாவூர்,

தமிழக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ரேவதி தலைமை தாங்கினார். மாநில தலைவர் உமா, மாநில பொதுச் செயலாளர் முருகேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கூட்டத்தில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு மே மாதத்தில் 1 வாரம் மட்டுமே கோடை விடுமுறை விடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கான சீருடையின் நிறத்தை மாற்ற எடுக்கப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.


ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரமும், உதவியாளர்களுக்கு ரூ.5 ஆயிரமும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு பெற்ற குறு அங்கன்வாடி ஊழியர்களுக்கு முதன்மை அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும். பதிவேடு முறையை செல்போன் மூலம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

போதிய பயிற்சி எதுவும் அளிக்காததால் செல்போன் மூலம் பதிவு செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். எனவே முறையான பயிற்சி அளிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில துணைத் தலைவர் கீதா, மாநில இணைச் செயலாளர்கள் அம்புஜம், கிருத்திகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் பானு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்