திசையன்விளை அருகே பரிதாபம், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு

திசையன்விளை அருகே, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-03-20 23:23 GMT
திசையன்விளை, 

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் முத்துகுமார். அவருடைய மனைவி சேர்மக்கனி. இவர்களுக்கு ஜெய கணேஷ் உள்ளிட்ட 2 மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு முத்துக்குமார் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தனியாக பிரிந்து சென்று கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். ஜெய கணேஷ் (வயது 10) திசையன்விளை அருகே மன்னார்புரத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் படித்து வந்தான்.

நேற்று முன்தினம் வெளியே சென்ற அவன், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவனை அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஜெய கணேஷ் பிணமாக மிதப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனால் பதறி துடித்த சேர்மக்கனி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கிடந்த ஜெயகணேசை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மகனின் உடலை பார்த்து சேர்மகனி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் இதுபற்றி உவரி போலீசில் சேர்மகனி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து அவன் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவனுடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்