தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்படும் பணம்- பொருட்கள் குறித்து உடனடியாக அறிக்கை கலெக்டர் உத்தரவு

தேர்தல் அதிகாரி களால் கைப்பற்றப்படும் பணம்-பொருட்கள் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அண்ணாதுரை உத்தர விட்டுள்ளார்.

Update: 2019-03-21 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அண்ணாதுரை தலைமையில் நடந்தது. தேர்தல் செலவின பார்வையாளர்கள் மண்டுகுமார்தாஸ், பிரகாஷ்நாத்பன்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:-

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் இதர மதிப்பு வாய்ந்த பொருட்களை பறக்கும்படைகுழு மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவில் உள்ள தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் கண்டறிந்து கைப்பற்ற வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமிருந்து விவரங்களை பெற்று தங்களின் பகுதியில் முறை கேடாக பணம் பறிமாற்றம் நடைபெறுவதை தடுக்க வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டும். பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களின் இயக்கம் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. கைப்பற்றப்படும் ரொக்கத்தொகை மற்றும் இதர பொருட்கள் குறித்து உடனடி அறிக்கை கொடுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்