சேலத்தில், இரவில் வாகன பட்டறையில் திடீர் தீ விபத்து

சேலத்தில், இரவில் வாகன பட்டறையில் திடீர் தீ விபத்து பொருட்கள் எரிந்து சேதம்.

Update: 2019-03-23 22:45 GMT
சேலம்,

சேலம் எருமாபாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவரது வாகன பட்டறை உள்ளது. இந்த பட்டறையில் நேற்று இரவு பணியாளர்கள் வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் பட்டறையை பூட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் இரவு 10 மணியளவில் பட்டறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதையடுத்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சிராஜூதின் தலைமையில் 5 வாகனங்களில் தீயை அணைப்பதற்காக சம்பவ இடத்திற்கு வீரர்கள் சென்றனர். அங்கு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே பட்டறையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியிருக்கலாம் எனவும், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்