திருவொற்றியூரில் திருமணத்துக்கு மறுத்த காதலன் கடத்தல் காதலியின் தாய் உள்பட 3 பேர் கைது

மகளை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை கடத்திய தாயை போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 பேரும் பிடிபட்டனர்.

Update: 2019-03-24 23:15 GMT
திருவொற்றியூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா கன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 25). தாம்பரம் இரும்புலியூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் திருவொற்றியூர் கார்கில் நகரை சேர்ந்த கவிதா என்பவரது மகள் திவ்யா (22) வேலை பார்த்து வந்தார்.

இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திவ்யா, கிருஷ்ணராஜிடம் கூறியுள்ளார்.

திருமணம் செய்ய மறுத்த கிருஷ்ணராஜ், திவ்யாவை சந்திப்பதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா, தனது காதல் விவகாரம் குறித்தும், காதலன் தன்னை திருமணம் செய்ய மறுத்ததையும் தனது தாயார் கவிதாவிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கவிதா, தனக்கு தெரிந்த சிலரின் உதவியுடன் கிருஷ்ணராஜிக்கு திவ்யாவை திருமணம் செய்து வைக்க தீர்மானித்தனர். அதன்படி நேற்று முன்தினம் கவிதா கிருஷ்ணராஜிக்கு போன் செய்து, திருமணம் தொடர்பாக பேச இருப்பதால், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகே வருமாறு அழைத்தார்.

இதையடுத்து கிருஷ்ணராஜ், தனது நண்பர் வக்கீல் வசந்தகுமார் என்பவருடன் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் மாலை வந்தார். அப்போது அங்கிருந்த கவிதா மற்றும் சிலர் கிருஷ்ணராஜை மட்டும் காரில் அமர்ந்து பேசலாம் என்று கூறி அழைத்துச் சென்றனர்.

அவர் காரில் அமர்ந்த வுடன் காரை வேகமாக ஓட்டி சென்றனர். நண்பரை காரில் கடத்தி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்த வக்கீல் வசந்தகுமார் இதுகுறித்து திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் காரை பின்தொடர்ந்து சென்று திருவொற்றியூர் பேசின்சாலை குப்பைமேடு அருகே காரை மடக்கி நிறுத்தினர்.

பின்னர் கிருஷ்ணராஜை மீட்டனர். அவரை கடத்திச் சென்ற கவிதா (38), சங்கர்குமார் (28) மற்றும் அரிகிருஷ்ணன் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அப்போது கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சங்கர்குமார், அரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் ஆந்திர மாநில சட்டக்கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த கடத்தலில் தொடர்புடைய தலைமறைவான சரவணன் என்பவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்