புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி முன்பு ஒப்பாரி வைத்த முதியவரால் பரபரப்பு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த புகார் பெட்டி முன்பு முதியவர் ஒப்பாரி வைத்து அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-03-25 23:00 GMT
புதுக்கோட்டை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை அருகே உள்ள வடவாளம் இச்சடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது கலெக்டர் உமா மகேஸ்வரி காரில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார். இதைக்கண்ட மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கலெக்டர் உமா மகேஸ்வரியை முற்றுகையிட்டு, தங்கள் மனுவை வாங்கி கொள்ளும்படி கோரிக்கை விடுத்தனர். பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கடந்த நவம்பர் மாதம் தாக்கிய கஜா புயலில் எங்கள் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எங்கள் பகுதியில் அரசு வழங்கிய நிவாரண தொகை 47 குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எங்களுக்கு நிவாரண தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

கந்தர்வகோட்டை தாலுகா அரண்மனைத்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 60). இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் தனக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் நான் எந்தஒரு அரசு சலுகையும் பெற முடியவில்லை. மேலும் என்னால் வாக்களிக்க முடியாமல் உள்ளது எனக்கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த மனுக்கள் பெட்டி முன்பு ஒப்பாரி வைத்து அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர் பெட்டியில் போட்ட மனுவில், நான் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரின் ஓரத்தில் சமையல் செய்து சாப்பிட்டு வருகிறேன். மழை வரும்போது பள்ளி காவலாளியிடம் அனுமதி பெற்று, பள்ளி வளாகத்தில் படுத்து கொள்வேன். எனக்கு உரிய முகவரி இல்லாத காரணத்தால் எனக்கு இதுவரை வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இதேபோல ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவையும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நான் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து இந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு ஆதார்கார்டு, ரேஷன் கார்டு போன்றவையும் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு புறம்போக்கு நிலத்தில் எனக்கு ஒரு குடிசை அமைத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தார். 

மேலும் செய்திகள்