வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் கலெக்டர் பேட்டி

வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.

Update: 2019-03-25 23:00 GMT
புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வைப்பறையில் இருந்து சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாசில்தார் அலுவலக வைப்பறைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கும் பணிகளை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தேர்தல் தாசில்தார் திருமலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நாடாளுமன்ற பொது தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்து 538 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு ஆயிரத்து 923 கட்டுப்பாட்டு கருவிகளும், 3 ஆயிரத்து 737 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஆயிரத்து 999 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கூடுதலாக கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்குப்பதிவு எந்திரம் 25 சதவீதமும், வாக்குப்பதிவு உறுதி செய்யும் கருவி 30 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கருவிகளை வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாசில்தார் அலுவலக வைப்பறைகளில் வைக்கும் வகையில் உரிய பாதுகாப்பு வசதியுடன், கலெக்டர் அலுவலக வைப்பறைகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த கருவிகள் வைப்பறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்புடன் 24 மணி நேரமும் முழு கண்காணிப்பில் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்கள் எவ்வித சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்