சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகளில் அனுப்பி வைப்பு

சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-03-25 22:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 3,234 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. இதற்காக 4,043 வாக்குப்பதிவு எந்திரங்களும் (பேலட் யூனிட்), 4,043 கட்டுப்பாட்டு கருவிகளும் (கன்ட்ரோல் யூனிட்) மற்றும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 4,172 வி.வி.பேட் கருவிகளும் தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற் றது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள விழுப்புரம் சேமிப்பு கிடங்கின் அறை திறக்கப்பட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் அந்த எந்திரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார்.

இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியவை விழுப்புரம் சேமிப்பு கிடங்கில் இருந்து லாரிகள் மூலமாக சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்தந்த தொகுதியில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள அறையில் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் 400-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்