திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் மனுதாக்கல்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.

Update: 2019-03-26 22:30 GMT
பூந்தமல்லி,

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.ம.மு.க. சார்பில் வேட்பாளர் பொன்.ராஜா திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவருடன் அ.ம.மு.க. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட வக்கீல்கள் பிரிவு இணை செயலாளர் முகமதுஅலி, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் மஸ்தான் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

அதே போல நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் எம்.லோகரங்கன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தேசிங்குராஜன், வக்கீல் சேதுபதி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்