சமூகவலைத்தளம் மூலம் காதல் காதலரை சந்திக்க சென்னை வந்த இலங்கை பெண் தற்கொலை

காதலரை சந்திக்க சென்னை வந்த இலங்கை பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-03-27 23:30 GMT

வண்டலூர்,

இலங்கையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மலர்மேரி (வயது 22). காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் (22). சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

மலர்மேரிக்கும், அவினாஷ்க்கும் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைத்தளம் மூலமாக நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த 7 மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் சமூகவலைத்தளம் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து விமானம் மூலம் மலர்மேரி தனது காதலனை பார்க்க சென்னை வந்தார். மலர்மேரியை அவினாஷ் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்தார். காதல்ஜோடி சென்னையில் பல இடங்களுக்கு ஒன்றாக ஜாலியாக சென்று வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 25–ந்தேதி மலர்மேரியை இலங்கைக்கு திருப்பி அனுப்ப காதலன் அவினாஷ் விமான டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மலர்மேரி இலங்கை செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவினாஷ் விடுதியில் காதலியை தங்க வைத்துவிட்டு நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார்.

மலர்மேரி தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது தூக்கில் மலர்மேரி பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, இலங்கை பெண்ணின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்று காதலர் அவினாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்