புதுக்கோட்டையில் லாரி மோதி முதியவர் பலி கல்லூரி மாணவிகள் 2 பேர் காயம்
புதுக்கோட்டையில் லாரி மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். கல்லூரி மாணவிகள் 2 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஆலங்குடியை நோக்கி சென்றது. புதுக்கோட்டை பேராங்குளம் பகுதியில் அந்த லாரி சென்றபோது, முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது 2 லாரி களும் உரசிக்கொண்டதாக தெரிகிறது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வைக்கோல் ஏற்றப்பட்ட லாரி, அந்த பகுதியில் சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மற்றும் 2 கல்லூரி மாணவிகள் மீது மோதியது. இதில் முதியவர் படுகாயமடைந்தார். கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கல்லூரி மாணவிகள் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், காயமடைந்த கல்லூரி மாணவிகள் புதுக்கோட்டை காந்திநகர் 6-ம் வீதியை சேர்ந்த கணேசன் மகள் விஜயலெட்சுமி(வயது 19), சந்திரன் மகள் சண்முகப்பிரியா(19) என்பதும், இவர்கள் 2 பேரும் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இறந்த முதியவரை பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.