100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தஞ்சையில் மாரத்தான் போட்டி

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தஞ்சையில் மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2019-03-31 23:00 GMT
தஞ்சாவூர்,


நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18–ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலோடு தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாகவும், உண்மையாகவும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம், கலைநிகழ்ச்சிகள், கோலப்போட்டி, கபடிப்போட்டி, மனிதசங்கிலி, படகுபோட்டி, கொலுபொம்மை கண்காட்சி போன்றவை நடத்தப்பட்டது.


அதன்தொடர்ச்சியாக வாக்காளரிடம் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி தஞ்சை பெரியகோவிலில் நேற்றுகாலை தொடங்கியது. போட்டியை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் உள்பட 300–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஓடி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தனர். இவர்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வாசகத்துடன் கூடிய பனியன் அணிந்திருந்தனர்.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்