‘விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது’ பிரேமலதா விஜயகாந்த் தகவல்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Update: 2019-03-31 22:00 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

வேலூர் தொகுதி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி உறுதியாக அமையப்போகிறது.

நான் இதுவரை 10 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்துள்ளேன். செல்லும் இடங்களெல்லாம் எங்கள் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பது தெரிகிறது.

தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளின் தூண்டுதல் எதுவுமில்லை. இதற்கு முன்பு தலைமை செயலாளர் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. அவருடைய தேர்தல் பிரசாரம் குறித்து கட்சி தலைமை அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கிழக்கு மாவட்ட செயலாளர் நித்யா உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்