பொதுமக்கள் ஆதரவு இருப்பதால் மதுரையில் ஜெயலலிதா இருக்கும் போது பெற்ற வெற்றியை பெறுவோம் அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்

பொதுமக்கள் அமோக ஆதரவு தருகிறார்கள். எனவே ஜெயலலிதா இருக்கும் போது பெற்ற வெற்றியை பெறுவோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2019-04-01 22:30 GMT

மதுரை,

மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு ஆதரவாக அமைச்சர் செல்லூர் ராஜூ, கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று அவர்கள் மேலூர் திருவாதவூர், அமூர், மீனாட்சிபுரம், கீரனூர், கொட்டகுடி, மேலப்பதினெட்டான்குடி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தனர். அப்போது பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரசாரத்தின் போது அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:–

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் இந்த பகுதியில் எண்ணற்ற சாதனை திட்டங்களை நிறைவேற்றி தந்து இருக்கிறோம். அதனால் தான் உங்களிடம் உரிமையோடு வாக்கு கேட்டு வந்திருக்கிறோம்.

ஜெயலலிதா 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்து கொண்டு இருந்தார். அவரது உழைப்பால் தான் தமிழகம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. அவரது வழியில் தற்போதைய அரசும் செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தினரும் அ.தி.மு.க. அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் பயனாளியாக இருக்கிறார்கள். எனவே தான் நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது. எனவே ஜெயலலிதா இருக்கும் போது பெற்ற வெற்றியை மீண்டும் பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்