வேப்பனப்பள்ளி, ஓசூரில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வேப்பனப்பள்ளி, ஓசூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-04-02 22:30 GMT
வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மக்கான் தெருவை சேர்ந்தவர் ஷஜிரா (வயது 35). நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். அந்த நேரம் இவரது வீட்டிற்கு வந்த மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் பீரோவை திறந்து உள்ளே இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய ஷஜிரா வீட்டில் நகைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.

ஓசூர் பிருந்தாவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (52). சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு பெங்களூருவுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இது குறித்து நாராயணன் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று தடயங்களை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்