மகளை காதலித்து குடும்பத்தை பிரித்த வாலிபருக்கு கத்திக்குத்து; மீனவர் உள்பட 2 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

மகளை காதலித்து குடும்பத்தை பிரித்த வாலிபரை கத்தியால் குத்திய சம்பவத்தில் மீனவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை பேலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-04-02 23:15 GMT
அரியாங்குப்பம்,

தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் எம்பெருமான் (வயது45) மீனவர். இவருடைய மனைவி சர்மிளா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதே பகுதியை சேர்ந்த அஞ்சாபுலி (30) என்பவருக்கும் இவர்களது இளைய மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு எம்பெருமான் சம்மதிக்கவில்லை. ஆனால் சர்மிளா ஆதரவு தெரிவித்தார்.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தான் விரும்பிய பெண்ணையும், அவரது தாய் சர்மிளாவையும் அரியாங்குப்பம் அன்னை இந்திராநகரில் ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து அஞ்சாபுலி வசித்து வந்தார்.

இந்தநிலையில் மனைவியை சமாதானம் செய்ய எம்பெருமான் தனது சகோதரர்கள் நாராயணன், ராமமூர்த்தி அவரது மகன் லோகேஷ் ஆகியோருடன் அரியாங்குப்பம் வந்தார். அங்கு தனது மனைவியுடன் சமாதானம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் சர்மிளாவுக்கு ஆதரவாக அஞ்சாபுலி தகராறில் ஈடுபட்டார்.

இதனால் அவரை எம்பெருமான் மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போது பேனா கத்தியால் குத்தியதில் அஞ்சாபுலிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி வழக்கு பதிவு செய்து எம்பெருமான், லோகேஷ் உள்பட 4 பேரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் எம்பெருமான், ராமமூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.தப்பி ஓடிய லோகேஷ், நாராயணன் இருவரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்