கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-04 23:00 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் பகுதியில் புஷ்வனம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் இருந்து அடிக்கடி இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேதாரண்யம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா மூட்டைகளையும், கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்களையும் கடலோர காவல் குழுமம் போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள பெரியகுத்தகை முத்துசாமி மகன் முனிஸ்வரன் (வயது30) என்பவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலிதீத்தான், இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர், கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த முனிஸ்வரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்