செல்போனை கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

செல்போனை கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்தனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-04-05 23:15 GMT
தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் வசித்து வந்தவர் ராஜகண்ணன் (வயது 23). அங்குள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை ஆகும்.

கடந்த 2-ந்தேதி இரவு ராஜகண்ணன், பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பொன்னுரங்கம் நகர் பகுதியில் சென்றபோது எதிரே வந்த 2 மர்ம நபர்கள், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை தரும்படி கேட்டனர்.

ஆனால் ராஜகண்ணன் செல்போனை கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு, அவரிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்றனர்.

பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராஜகண்ணனை, அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராஜகண்ணன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்