நிதி நிறுவனம் நடத்தி ரூ.1.44 கோடி மோசடி 5 பேர் கைது

நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடியே 44 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-05 22:40 GMT
தானே,

தானேயில் இயங்கி வந்த ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இதை நம்பி பலர் அந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். சில மாதங்கள் அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வட்டி தொகையை கொடுத்து உள்ளது. அதன்பின்னர் வட்டி வழங்குவதை நிதி நிறுவனம் நிறுத்தி கொண்டது.

இதனால் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்துக்கு சென்று கேட்டனர். ஆனால் அங்கிருந்தவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் காப்பூர்பாவடி போலீசில் புகார் அளித்தனர்.

5 பேர் கைது

இந்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.1 கோடியே 44 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்து இருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நிதி நிறுவனம் நடத்தி வந்த கல்யாணை சேர்ந்த பிரகாஷ் (வயது52), தானேவை சேர்ந்த சந்திப் (42), டெல்லியை சேர்ந்த உமங் ஷா (27), சூரத்தை சேர்ந்த அஜய் மகேஷ் (43), வல்சாட்டை சேர்ந்த ரித்தேஷ் (35) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்