திருச்சி விமான நிலையத்தில் ரூ.21½ லட்சம் கடத்தல் தங்க சங்கிலிகள் பறிமுதல்

திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Update: 2019-04-07 22:45 GMT
செம்பட்டு,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சிலர் தங்கம், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்க திருச்சி விமான நிலைய மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை சோதனை செய்து, கடத்தி வரப்படும் பொருட்களை பறிமுதல் செய்வார்கள். இந்த நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ரசூல், அப்பாத்துரை, சாகுல்அமீது மற்றும் சிவகங்கையை சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் தங்கள் உடைமைகளில் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.21½ லட்சம் மதிப்பிலான 749 கிராம் தங்க சங்கிலிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த 4 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்