பரமத்திவேலூரில் கள்ளக்காதல் தகராறில் டீக்கடைக்காரருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது

பரமத்திவேலூரில் கள்ளக்காதல் தகராறில் டீக்கடைக்காரரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-08 22:15 GMT
பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் கிழக்கு வண்ணாந்துறை பகுதியை சேர்ந்தவர் சுந்தரானந்தன் (வயது 50), டீக்கடைக்காரர். பரமத்திவேலூர் மேலத்தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவருடைய மனைவி செல்விக்கும் (46), சுந்தரானந்தனுக்கும் கடந்த 25 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை சுந்தரானந்தன் பரமத்திவேலூரில் உள்ள செல்வியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த செல்வியின் மகன் அன்புராஜ் (29), தனது வீட்டுக்கு வரக்கூடாது என சுந்தரானந்தனை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அன்புராஜ், சுந்தரானந்தனை கத்தியால் குத்தி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த சுந்தரானந்தனை அருகில் இருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிசிச்சைக்காக நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் சுந்தரானந்தத்தை கத்தியால் குத்தியதாக, அன்புராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்