ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் கைது

ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-09 22:15 GMT
பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சாமியார்தோட்டம் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கோபி (வயது 28). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.

கோபி ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் வேலையும் செய்து வந்தார். இவர் பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி குடிசைப்பகுதிக்கு அடிக்கடி தண்ணீர் கேன் வினியோகம் செய்ய செல்வது வழக்கம். அப்போது அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். கோபி சிறுமியை அடிக்கடி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியின் கழுத்தில் தாலி இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில், ஆட்டோ டிரைவர் கோபி ஆசை வார்த்தை கூறி சிறுமியை பெரியபாளையம் கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த கோபியை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்