காஞ்சீபுரம் அருகே குப்பை மேட்டில் மர்மபொருள் வெடித்ததால் பரபரப்பு வாயில் கவ்விய நாய் சாவு

காஞ்சீபுரம் அருகே நாய் கவ்விய மர்மபொருள் வெடித்தது. இதில் அந்த நாய் தலை சிதறி பரிதாபமாக இறந்தது.

Update: 2019-04-09 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே உள்ளது புத்தேரி கிராமம், இங்குள்ள குப்பை மேட்டில், நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இதனால் புகை கிளம்பியது. அங்கு நாய் ஒன்று தலை சிதறி இறந்து கிடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று மர்ம பொருள் வெடித்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் போலீசார் புத்தேரி கிராமத்திற்கு விரைந்து சென்று, மர்்ம பொருள் வெடித்த இடத்தில் ஆய்வு செய்தனர். இரவு நேரம் என்பதால் அவர்களால் தொடர்ந்து ஆய்வு நடத்த முடியவில்லை.

காட்டு பன்றிகளை விரட்ட, வெடிபொருளை யாராவது பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குப்பை மேட்டில் கிடந்த வெடிபொருளை அந்த வழியாக சென்ற நாய் கவ்விய போது, அது வெடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. போலீஸ் விசாரணைக்கு பின்னர் அந்த பொருள் என்ன என்பது தெரியவரும்.

மேலும் செய்திகள்