ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தீயணைப்புத்துறை அலுவலர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை - கதவை உடைத்து துணிகரம்

தீயணைப்புத்துறை அலுவலர் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-04-11 22:55 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வருபவர் வீரராஜ் (வயது45). இவர் விருதுநகர் அருகே உள்ள கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணிக்கு சென்றதையடுத்து அவரது மனைவி சங்கீதா இரவு 10 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் பற்றி வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் துறை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து வீடுகள் உள்ள நிலையில் அங்கு கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்