தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் போலீசார் உதவியோடு அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா முத்தரசன் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் போலீசார் உதவியோடு அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.

Update: 2019-04-15 23:00 GMT
திருவாரூர்,

நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் எம்.செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று திருவாரூர் வருகை தந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது போல பிரசாரத்தை நாளை (அதாவது இன்று) திருவாரூரில் நிறைவு செய்கிறார். தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் போலீசார் உதவியோடு அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். சாதாரண வியாபாரிகளை மறித்து பணத்தை பறிக்கின்ற தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினரின் பணப்பட்டுவாடாவை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,


எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஜனநாயகத்திற்கு விரோதமான வகையில் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க கூட்டணி செயல்படுகிறது. எனவே தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்தல் 2 கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் அல்ல. நாட்டையும், அரசியல் சட்டத்தையும், மதசார்பின்மையையும் காப்பாற்றுவதற்கான தேர்தல்.

அன்புமணி ராமதாஸ் வாக்கு சாவடிகளில் வன்முறையை தூண்டி தங்களுக்கு சாதகமாக வாக்குகளை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிப்படையாகவே பேசுகிறார். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி வந்த ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு பெட்டி இறக்கப்பட்டு தனியார் காரில் ஏற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.


சிறுபான்மையின மக்கள் அச்சத்தில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாடுகாப்பாற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். அ.தி.மு.க. அரசு நீட் தேர்வை ரத்து செய்வேன் என்கிறது. ஆனால் பா.ஜனதா அதுகுறித்து எந்தவிதமான கருத்தும் கூறவில்லை.

சேலம் எட்டுவழிச்சாலைக்கு நீதி மன்றம் தடைவிதித்துள்ளது. மத்திய மந்திரி நிதின் கட்காரி, தமிழக முதல்–அமைச்சரின் ஆதரவோடு மீண்டும் எட்டுவழிச்சாலை அமைப்போம் என்று பேசுகிறார். மதவாத கும்பலுக்கு முடிவுகட்டுவோம். மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றாட்சி காண்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, சேதுராமன், மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்