சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2019-04-15 23:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு வேலன்கண்டிகை கொள்ளமதுராபுரத்தை சேர்ந்தவர் சித்தையா (வயது 55). விவசாயி. அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 28.7.2013 அன்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமியை சித்தையா, தனது வீட்டிற்கு கூட்டிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்தார்.

அவர் இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தையாவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டமும் பாய்ந்தது.

இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக தனலட்சுமி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து சித்தையாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிவாரணத்தொகை வழங்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஆர்.கே.பேட்டை போலீசார் சித்தையாவை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்