எருமப்பட்டியில் அ.தி.மு.க. பிரமுகர் மருந்து கடையில் ரூ.2½ லட்சம் பறிமுதல்

எருமப்பட்டியில் அ.தி.மு.க. பிரமுகர் மருந்து கடையில் ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-04-15 22:15 GMT
எருமப்பட்டி, 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் பாலுசாமி. இவருடைய வீடு பஸ்நிறுத்தம் அருகில் உள்ளது. மருந்து கடையும் பஸ்நிறுத்தத்தில் உள்ளது. நேற்று மதியம் 2 மணியளவில் இவருடைய வீடு மற்றும் மருந்து கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சென்று சோதனை நடத்தினர். மாலை 6 மணிவரை இந்த சோதனை நீடித்தது.

அப்போது மருந்து கடையில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். பறக்கும் படையினர் அந்த பணத்தை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருப்பதாக பாலுசாமி தரப்பில் கூறப்பட்டது. எனவே அந்த ஆவணங்களை காண்பித்து விட்டு பணத்தை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதும், மருந்து கடையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்