கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை

கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-04-15 22:15 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீரமாங்குடி கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் கபிஸ்தலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகவன், வேம்பு மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

கொலையா?

விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் ஒருவர் கொள்ளிடம் ஆற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்