புகையிலை பொருட்களை நிரந்தரமாக தடை செய்யும் புதிய அரசாணையை வெளியிடக்கோரி வழக்கு; தலைமை செயலாளருக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

குட்கா, புகையிலை பொருட்களை தடை செய்யும் புதிய அரசாணையை வெளியிடக்கோரிய வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு, நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-15 22:30 GMT
மதுரை,

மதுரையைச் சேர்ந்த செந்தில், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆணையை நீட்டிப்பு செய்யாமல், நிரந்தரமாக தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது என புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

மேலும் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டபோதும், தமிழகத்தின் அனைத்து நகரங்களில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இவை தடையின்றி விற்கப்படுகிறது. எனவே இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக கடைகளில் சோதனை நடத்தவும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்