என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா? அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா? என அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி விடுத்தார்.

Update: 2019-04-15 23:30 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் பல்வேறு பகுதிகளில் ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்து வருகிறார்.

அதன்படி அமைச்சர் நமச்சிவாயம் நேற்று மாலை அய்யங்குட்டிப்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் திறந்த ஜிப்பில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

பிரசாரத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. குறிப்பாக புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதாக அறிவித்தார். அதை அவர் நிறைவேற்றினாரா? என்றால் இல்லை.

பா.ஜனதாவுடன், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அவர்களால் நாங்கள் மோடியை பிரதமராக்க மக்களிடம் ஓட்டு கேட்கிறோம் என பகிரங்கமாக அறிவிக்க முடியுமா? நாங்கள் ராகுல்காந்தியை பிரதமராக்க மக்களிடம் வாக்குகள் கேட்கிறோம். ராகுல் காந்தி பிரதமரானால் புதுவைக்கு மாநில அந்தஸ்து, நீட் தேர்வு ரத்து, ஏழை எளிய மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் நிதி உதவி உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வைத்திலிங்கம் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமுள்ளவர். அவரால் மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை பெற்றுத் தருவார். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மாநிலத்திற்கான திட்டங்களை பெற இயலாது. நீங்கள் அளிக்கும் வாக்கு புதுவை மாநிலத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்க உள்ளது. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்