கடந்த சில வாரங்களில் மும்பையில் ரூ.14 கோடி பறிமுதல் வருமான வரித்துறை அதிகாரி தகவல்
கடந்த சில வாரங்களில் மட்டும் மும்பையில் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி கூறியுள்ளார்.
மும்பை,
கடந்த சில வாரங்களில் மட்டும் மும்பையில் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி கூறியுள்ளார்.
அதிரடி சோதனை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தார்டுதேவ் பகுதியில் பிரசாந்த் சமாதானி என்ற தொழில் அதிபரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கடந்த 13-ந் தேதி ஜவேரி பஜாரில் துஷ் காவேடியா என்பவரிடம் இருந்து ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் மட்டும் மும்பையில் பல்வேறு இடங்களில் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மும்பை வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
பையில் ரூ.2½ கோடி
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஜவேரி பஜார் மற்றும் ஒபராய் ஹவுஸ் பகுதியில் மட்டும் நடத்தப்பட்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.6 கோடி வரை பறிமுதல் செய்து உள்ளோம்.
இதில் அங்கு சந்தேகத்துக்கு இடமாக கிடந்த பையில் இருந்து ரூ.2½ கோடி மீட்கப்பட்டது. ஆனால் அந்த பணத்தை உரிமைக்கோரி இதுவரை யாரும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.