மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தாசில்தார் அலுவலக உதவியாளர் பலி

பரமத்தி வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தாசில்தார் அலுவலக உதவியாளர் பலியானார்.

Update: 2019-04-17 22:15 GMT
பரமத்தி வேலூர்,

மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி பாவடி தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு பிரிவில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பணிக்கு செல்வதற்காக மனப்பள்ளியில் இருந்து பரமத்தி வேலூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பரமத்தி வேலூருக்கு வரும் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது நாமக்கல்லில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று முருகன் மீது மோதியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்