உசிலம்பட்டி அருகே, ஓட்டுப் போட்ட சில நிமிடங்களில் உயிரைவிட்ட 90 வயது மூதாட்டி
உசிலம்பட்டி அருகே ஓட்டுப்போட்ட சில நிமிடங்களில் 90 வயது மூதாட்டி உயிரைவிட்ட பரிதாபம் நேர்ந்தது.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம்புதூரை சேர்ந்தவர் மொக்கச்சாமி. அவருடைய மனைவி முத்துப்பிள்ளை (வயது 90). இவர் நேற்று அந்த கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட சென்றார்.
அங்கு ஓட்டு போட்டுவிட்டு முத்துப்பிள்ளை, வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்தார். சற்று நேரத்தில் அவர் திடீரென்று அங்கு மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் முத்துப்பிள்ளையை உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தேர்தலில் ஓட்டுப்போட்ட சில நிமிடங்களில் 90 வயது மூதாட்டி உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.