வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு - கலெக்டர், போலீஸ் அதிகாரி பார்வையிட்டனர்

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை, கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரி ஆகியோர் பார்வையிட்டனர்.

Update: 2019-04-19 22:52 GMT
காரைக்குடி,

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் பதிவான எந்திரங்களை, வாக்கு எண்ணிக்கை மையமான காரைக்குடி அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கொண்டுவரப்பட்டன. இரவு முழுவதும் போலீஸ் பாதுகாப்போடு பெட்டிகள் வந்த வண்ணம் இருந்தன. நேற்று காலை 8.30 மணி வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தன.

அதன்பின்பு சீலிடப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதிவாரியாக ஒதுக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டு அந்த அறைகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்போடு வைக்கப்பட்டன.

சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்த மானாமதுரை தொகுதியின் வாக்குப்பதிவு எந்திரங்கள் முருகப்பா ஹாலில் வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இரவை பகலாக்கும் மின் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தீயணைப்புத்துறையினர், வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு நிபுணர்கள், மருத்துவ குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர்.

252 போலீசார் வீதம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி ஆகியவற்றை கலெக்டர் ஜெயகாந்தன், டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்