அரசு பஸ் டிரைவரின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.40 ஆயிரம் திருட்டு

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பஸ் டிரைவரின் வங்கி கணக்கில் இருந்து நூதனமுறையில் ரூ.40 ஆயிரத்தை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-04-21 22:15 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பூண்டுவெளியை சேர்ந்தவர் காத்தையன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 37). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். ரமேஷ் திருத்துறைப்பூண்டி கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த 17-ந் தேதி இவருக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர் தான் கனரா வங்கி தலைமையகத்தில் இருந்து பேசுவதாகவும் ரமேசின் ஏடி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும். எனவே கார்டின் பின் பகுதியில் உள்ள நம்பரை கொடுங்கள் என கேட்டார்.

இதை நம்பிய ரமேஷ் நம்பரை கூறினார். ரமேஷ் எண்ணை கூறிய சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து

ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. தனது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிய ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்