கொல்லிமலையில் அரிவாளால் வெட்டப்பட்ட பெண் சாவு விவசாயி கொலை வழக்கில் தம்பி உள்பட 3 பேர் கைது

கொல்லிமலையில் அரிவாளால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையில் விவசாயி கொலை வழக்கில் தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-04-22 22:00 GMT
சேந்தமங்கலம், 

கொல்லிமலையில் உள்ள திருப்புளிநாடு - ஊர்புறம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கனகராஜ் (வயது 42). இவருக்கும், இவரது சித்தப்பா மகன் பழனிவேல் முருகன் (35) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. அதன் காரணமாக சம்பவத்தன்று இரு குடும்பத்தினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது பழனிவேல் முருகனின் மனைவி சாந்தியை, கனகராஜ் அரிவாளால் வெட்டி பலத்த காயங் கள் ஏற்படுத்தினார். இதையறிந்த பழனிவேல் முருகன் கனகராஜை வெட்டி கொன்றார். இது தொடர்பாக கொல்லிமலை வாழவந்திநாடு போலீசார் இரு குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கனகராஜின் மனைவி பூஞ்சோலை, அவரது மகன் வல்லரசு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பழனிவேல் முருகன், அவரது மைத்துனர் வீரபாண்டி (29) மற்றும் உறவினர் பரமசிவம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையில் சேலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தி சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்