குறுக்கே மாடு வந்ததால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

குறுக்கே மாடு வந்ததால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியாயினர்.

Update: 2019-04-22 22:30 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பேட்டைமேடு கிராமத்தை சேர்ந்தவர் தரணி (வயது 35). தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று பெரியபாளையத்தில் இருந்து வடமதுரை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வெங்கல் நெடுஞ்சாலையில் பேட்டைமேடு கிராமம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே மாடு ஒன்று திடீரென வந்தது. இதனால் தரணி நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தரணி இறந்து போனார். இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

மேலும் செய்திகள்