மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரம்: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது
மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் அடைந்து பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்குளி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 32). இவருடைய மனைவி மல்லிகா(27). இவர்கள் ஊத்துக்குளி அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். வீரக்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
வீரக்குமாருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். அது போல் சம்பவத்தன்று மது குடிப்பதற்காக வீரக்குமார், தனது மனைவியிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வீரக்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மல்லிகாவை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கை, கழுத்து பகுதியில் வெட்டு விழுந்தது. இதனால் அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
உடனே அங்கிருந்து வீரக்குமார் தப்பி ஓடி விட்டார். பின்னர் படுகாயம் அடைந்த மல்லிகாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த வீரக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.