திருவட்டார் அருகே இளம் பெண்ணுக்கு பாட்டில் குத்து ஊர்காவல் படை வீரருக்கு வலைவீச்சு

இளம்பெண்ணை பாட்டிலால் குத்திய ஊர்காவல் படை வீரரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-04-24 22:15 GMT
திருவட்டார்,

திருவட்டார் அருகே இட்டகவேலி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ஸ்ரீஜா (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் இறந்து விட்டார்.

இதனால் ஸ்ரீஜா குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அஜி (28). இவர் நாகர்கோவிலில் ஊர் காவல் படையில் பணியாற்றி வருகிறார். அஜி மற்றும் அவருடைய தந்தை தங்கராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து அடிக்கடி ஸ்ரீஜாவை கேலி செய்து வந்தனர்.


இந்தநிலையில் சம்பவத்தன்று ஸ்ரீஜா வீட்டில் இருந்தபோது அங்கு வந்த அஜி மீண்டும் அவரை கேலி செய்தார். இதை ஸ்ரீஜா தட்டி கேட்டார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஜி, மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து ஸ்ரீஜாவை குத்திவிட்டு தப்பிச் சென்றார். படுகாயம் அடைந்த ஸ்ரீஜாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து ஸ்ரீஜா திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், அஜி மற்றும் அவருடைய தந்தை தங்கராஜ் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்