காங்கிரஸ்– தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் உறுதி
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தமிழகம்–புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கூறினார்.
புதுச்சேரி,
புதுவை காங்கிரஸ் மேலிட பார்வையாளரான சஞ்சய்தத் நேற்று புதுச்சேரி வந்தார். புதுவை விமான நிலையத்தில் அவரை காங்கிரஸ் துணைத்தலைவரும், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளருமான தேவதாஸ், ஆதிதிராவிடர் பிரிவு தலைவர் வீரமுத்து ஆகியோர் வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:–
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி. தமிழகம்–புதுச்சேரியில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.
கடந்த தேர்தலின்போது ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக பொய் வாக்குறுதி அளித்து பாரதீய ஜனதா மக்களை ஏமாற்றியது. அம்பானி, அதானி போன்ற சில பண முதலாளிகளுக்காக மட்டுமே மோடி அரசு செயல்பட்டு வந்துள்ளது.
ஏழை மக்களுக்காக மோடி அரசு செயல்படவில்லை. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதுதான் மோடி அரசின் சாதனை. நாட்டில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பதற்கு காரணமே மோடியின் மோசமான ஆட்சிதான்.
இவ்வாறு சஞ்சய்தத் கூறினார்.