திருமயம் அருகே பெண் வெட்டிக்கொலை தம்பி வெறிச்செயல்

திருமயம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-04-26 22:45 GMT
திருமயம்,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கம்மங்குடிப்பட்டியை சேர்ந்த கருப்பையா மனைவி அழகுலெட்சுமி (வயது 30). இவரது பெரியப்பா மகன் மணி (28). இவர் தினமும் மது குடித்து வந்து அழகுலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று மதியம் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கம்மங்குடிப்பட்டி கண்மாயில் அழகுலெட்சுமி வேலை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் சென்ற மணி அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த மணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அழகுலெட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மாலையில் இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மணியை வலைவீசி தேடி வருகின்றனர். குடிபோதையில் அக்காவை தம்பி வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்