மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-05-01 22:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த கல்லூரியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் முதலாமாண்டு படித்து வருகிறார்.

அந்த மாணவிக்கு, பேராசிரியர் ரஞ்சன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பேராசிரியர் மீது வழக்கு

இதையடுத்து குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா சம்பந்தப்பட்ட கல்லூரியிலும், பாதிப்புக்குள்ளான மாணவியிடமும் விசாரணை மேற்கொண்டார். இதில் மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.

பின்னர் அதிகாரி குமுதா, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ரஞ்சன் மீது புகார் கொடுத்தார். இதற்கிடையே ரஞ்சன் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி மற்றும் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின்கீழ் ரஞ்சன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்