விழுப்புரத்தில் வேன் மீது கார் மோதல், கணவன்-மனைவி பலி , 11 பேர் படுகாயம்

விழுப்புரத்தில் வேன் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியாகினர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-05-06 23:00 GMT
விழுப்புரம்,

மதுரை சதாசிவம் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் சக்திவேல் (வயது 75), இவருடைய மனைவி தங்கம் (68). இவர்கள் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களுடைய மகன் சந்திரசேகர் (47) சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சந்திரசேகர் வீட்டில் அவரது தாய், தந்தை இருவரும் தங்கியிருந்து வந்தனர்.

இந்நிலையில் மதுரையில் உள்ள தங்கத்தின் உறவினர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிவக்குமார் சக்திவேல், அவரது மனைவி தங்கம், மகன்கள், திருமலைகுமார் (46), சந்திரசேகர், இவருடைய மனைவி வசுமதி (42), உறவினர்கள் மீனாட்சிசுந்தரம் (65), பார்வதி (60) ஆகியோர் ஒரு காரில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றனர்.

அங்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் அவர்கள் 7 பேரும் மதுரையில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டனர். காரை சென்னை கொளத்தூரை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் ஓட்டிச்சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் விழுப்புரம் புறவழிச்சாலையில் இவர்களது கார் வந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரமாக வேன் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக கண் இமைக்கும் நேரத்தில் கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சிவக்குமார் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி தங்கம், திருமலைக்குமார், சந்திரசேகர், வசுமதி, மீனாட்சிசுந்தரம், பார்வதி, கார் டிரைவர் மணிகண்டன் மற்றும் வேனில் இருந்த தர்மபுரி அரூரை சேர்ந்த தண்டபாணி மகள் தமிழரசி (19), மேல்பள்ளிப்பட்டை சேர்ந்த சக்திவேல் (22), தசராப்பட்டியை சேர்ந்த சிவனேஷ் (19), கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜய் (19), சின்னசேலத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள் சுகாசினி (21) ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்தில் பலியான சிவக்குமார் சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு போலீசார் மீட்பு வாகனத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினர்.

இதனிடையே விபத்தில் படுகாயமடைந்த தங்கத்திற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். மற்ற 11 பேரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்